Sunday 11 February 2018

மத்திய சங்க போராட்ட அறிவிப்பு 

அன்பார்ந்த தோழர்களே! தோழியரே!

      ஏழாவது ஊதியக்குழுவின் பணப்பலன்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பின்னரும், இந்திய அஞ்சல் துறையில் கிராமப்புறங்களில் பணியாற்றும் கிராமிய அஞ்சல் ஊழியருக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி தனது அறிக்கையினை அரசுக்கு 24.11.2016 அன்று அளித்தது. கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமுல் படுத்திட பல்வேறு போராட்ட்டங்களை நடத்திய பின்னரும் அரசும், இலாகாவும் தொடர்ந்து மெத்தன போக்கையே கடைபிடித்து வருகிறது. இன்று, நாளை என நாட்களை கடத்துவதிலேயே குறியாக உள்ளது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த பின்னரும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒருசில விளக்கங்கள் கேட்டு மீண்டும் இலாகாவுக்கு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஊழியர் நலனில் அக்கரை இல்லாத அரசு மீண்டும் நம்மை ஏமாற்றும் சூழல் உருவாகிவிடுமோ எனும் அச்சம் நமது தோழர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. "செய் அல்லது செத்துமடி" எனும் சொல்லுக்கு ஏற்ப நமது AIGDSU சங்கம் தொடர்ந்து அறிக்கையின் அமுலாக்கத்திற்கான போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

பணியிடங்களில் கறுப்பு பட்டை அணிந்து போராட்டம் 

                        கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை காலம் தாழ்த்திடும் மத்திய அரசின் ஏதேச்சாதிகார போக்கினை கண்டித்து வரும் 19.02.2018 முதல் 24.02.2018 வரை அஞ்சலகங்களில் ஊழியர்கள் பணியின்போது கறுப்பு பட்டை அணிந்து போராடிடவும் வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2018) அன்று பிரதமர் இல்லத்தின் முன்பு பெருந்திரள் தர்ணா போராட்டம் நடத்திடவும் நமது மத்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் போராட்டம் நடத்திட கோட்ட கிளை செயலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்திடவும். மேலும் 15.03.2018 அன்று டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து பெருவாரியான தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும். அதற்கான பயண ஏற்பாட்டினை உடனடியாக தயார் செய்து கொள்ள மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.




M பாஸ்கரன் 
மாநில செயலர்(பொறுப்பு)
















1 comment: